29 ஜூன், 2010

முதுமைக்காதல்

முதுமைக்காதல்

இத்தனை ஆண்டுக்கால
இல்லறச் ச(சு)கவாசத்தில்
எத்தனையோ முறை
முயன்றிருக்கிறேன்
அவள் மீதான என்
ஆழமான அன்பினை அவள்
உள்மனம் உணரச் சொல்லிவிட...
ஆனால் என்ன செய்ய
ஒவ்வொரு முறை
முயலும்போதும் அவளது
அளப்பரிய அன்பின்
விஸ்வரூபத்தில்
வாயடைத்துப்போய்விடுவதால்
ஒருமுறைகூட சொன்னதுமில்லை...
அவளும் எதிர்பார்த்ததுமில்லை.

23 ஜூன், 2010

பூக்கள்

பூமித் தாவரங்களின்
பிரசவ காலப்
புன்னகை !

கிளைகளில் குவிந்த
வான வில்லின்
வசீகரம் !

மகரந்தக் கூடத்தில்
தேன் தயாரிக்கும்
மலர்த் தொழிற்சாலை !

ஈக்களை எதிர்பார்த்துப்
பரிமாறப்பட்ட
பந்தி!

அழகுக்கெல்லாம் ஆயுள்
அற்பம் என்பதை
உணர்த்தும் உன்னதம் !

விஷச்செடியானாலும்
விளைகிறது இங்கே
சுவைத்தேன் !

வாழ்வுக்கும் சாவுக்கும்
வேறுபாடில்லாத
விற்பனை!

(எனது "பூட்டுகள்" நூலிலிருந்து )

சிங்கப்பூரிலும் சாதி.




சிங்கப்பூரிலும் சாதி!


விரதமிருந்து வென்றுவருகிறேன் -என்
விடலைப்பருவ சபலநாட்களை இந்த
வெள்ளித்தீவிலும்.....

ஆடையைச் சுமையாய் என்னும்
அழகிகளைச் சாலையில்
அடிக்கடி கடக்கும்போதும்...

பெரிய திரையிலும்
சின்னத்திரையிலும்
கட்டிலறையில் கணினித்திரையிலும்
ஆபாசங்கள் திரை விரிக்கும்போதும்...

இன்னும் எத்தனையோ
வண்ண வண்ண வசீகரங்கள்
சபலநரம்புகளுக்கு
சாப்பாடு போடக்
கூப்பிடும்போதும்
விரதமிருந்து
வென்று காட்டவும்
காத்திருக்கும் காதலிக்காக
கற்பைப் பாதுகாத்துவைக்கவும்
காரணமாயிருக்கிற
அந்த மந்திரம்,
“மேலைக்கலாசாரத்தில்
விழுந்துவிடாமல்
சிங்கப்பூரிலும் சாதி” என்று தந்தை
சொல்லியனுப்பிய சேதிதான்.

21 ஜூன், 2010

வெண்பாக்கள்

குறள் வெண்பா

நெடிய மனக்கவலை,நீடித்த சோகம்
வடியக் கவிதை வடி.


சிந்தியல் வெண்பா

தெள்ளுதமிழ்ச் சொத்தெமக்கு; சிந்தனைக்கு நல்லறிவை
அள்ளியள்ளி ஊட்டும் அமுதமழை- வெள்ளமது
வள்ளுவமோர் முப்பால் மது.

நேரிசை வெண்பா

மாமியார் வீடின்றி வாழ்வை அனுபவிக்க
சாமியார் வாழ்வே சரியென்று-தாமிருந்த
மோனத் தவநிலையில் மோகத்தீ மூளவிட்டோர்
காணவேண்டும் வெஞ்சிறையில் காப்பு.

இன்னிசை வெண்பா

ஈழத்தின் ஏக்கம் இதயமெலாம் சூழ்ந்திருக்க
வாழத் தலைப்பட்ட வள்ளியம்மைத் தாய்போன்றோர்
நீர்வழியும் கண்களொடு நீர்வழியும் வான்வழியும்
பார்முழுதும் வேர்விட்டார் பார்.

19 ஜூன், 2010

செடிகள்


மரங்களின் வீர்யத்தை
நிச்சயிக்கும்
இயற்கை எக்ஸ்ரே !

பூமித்தாயின் முகத்தில்
முளைத்த பச்சைப் பருக்கள் !

மண்கோழி அடைகாத்த
விதை முட்டையை
உடைத்துக்
கிளர்ந்தெழுந்த
தாவரக் குஞ்சு !

மரங்கள்
மரபுக் கவிதையென்றால்
செடிக்கவிதை ஓர் ஹைக்கு !

பூமித்தாயை விட்டு
உயரே வளர
ஆசைப்படாத
அம்மா பிள்ளைகள் !

(எனது "பூட்டுகள்" கவிதை நூலிலிருந்து )