10 பிப்ரவரி, 2011

வாயில்லா ஜீவன்

திரையரங்க நெரிசலில்
திடீரெனப் புகுந்த பசு
கணக்கற்றோரைக் குத்திக்
காயப்படுத்தியதாகச் செய்தி...

பாவம் என்ன செய்யும்
பசுதானே அது...
பேச மட்டும் தெரிந்திருந்தால்
வன்முறையில் இறங்காமல்
வாய் திறந்திருக்கும் இப்படி...

“எத்தனைதான் மடியை நான்
ஏறக்கட்டிக் கொண்டாலும்
சொட்டுகூடக் கன்றுக்கின்றி
ஒட்டக்கறந்து விடுகிறீர்கள்... சரி
என்பிள்ளைக்குத்தான்
எட்டவில்லை
எவர் பிள்ளைக்காவதுகூட
பசியைப் போக்கப்
பயன்படுத்தாமல்
பாவிகளே இப்படி
“கட் அவுட்” படத்தின் மேல்
கவிழ்க்கிறீர்களே”- என்று
வாய் பேசத்தெரிந்திருந்தால்
வன்முறை செய்திருக்காதுதான்...

பாவம் என்ன செய்யும்
பசுதானே அது!

24 ஜூலை, 2010

தடங்கல்களின் தடங்கள்



தடங்கல்கள்...அவை

தடைகளல்ல ,

பயணப்படிக்கட்டுக்களில்

பாதங்களை உள்வாங்கும்

பள்ளங்களிலிருந்து -தன்

உள்ளங்கைகளால்

உயர்த்திப்பிடிக்கும்

உதவும் கரங்கள்.


சோர்வும் துயரமும்

சேர்ந்தழுத்தும்போது

தோழமை ரத்தங்களே

தூரமாகிப் போனாலும்

தடங்கல்கள்தான்

குதிரையின் குளம்பொலியோடு

போட்டியிட்டு

பாயப் பழக்குகிறது மனதை


தொடரும் தோல்விகளால்

ரத்தத்திலும் மனதிலும்

அழுத்தம் அதிகமாகும் போது

தடங்கல்கள்

நம்முள் உறங்கும்

போராட்டக் குணத்தை

உயிர்த்தெழச் செய்து

உற்சாகக் குளியலில்

நித்தமும் நம்மை

நீராட்டுகிறது !


நடுவிரலின் வளர்ச்சிகண்டு

பொறாமையில் பொசுங்கும்

கட்டை விரலின்

கவலை போல

யதார்த்த வளர்ச்சியைக்கூட

கண்டு பொறுக்காத சில

செயற்கைத் தடங்கல்கள்

கால ஓட்டத்தில்

காணாமற் போகும் ... எனவே

தடங்கல்களை

வாழ்க்கையின் வாசலில் நின்று

வரவேற்போம் ...


போர்க்குண நெருப்பில்

புடம் போடப்பட்ட நம்

வாழ்வின் அடையாளங்களை

வருங்காலத் தலைமுறைக்குப்

படம்போட்டுக் காட்டுவன

இந்த

தடங்கல்களின்
தடங்கள்கள்தான்!.

29 ஜூன், 2010

முதுமைக்காதல்

முதுமைக்காதல்

இத்தனை ஆண்டுக்கால
இல்லறச் ச(சு)கவாசத்தில்
எத்தனையோ முறை
முயன்றிருக்கிறேன்
அவள் மீதான என்
ஆழமான அன்பினை அவள்
உள்மனம் உணரச் சொல்லிவிட...
ஆனால் என்ன செய்ய
ஒவ்வொரு முறை
முயலும்போதும் அவளது
அளப்பரிய அன்பின்
விஸ்வரூபத்தில்
வாயடைத்துப்போய்விடுவதால்
ஒருமுறைகூட சொன்னதுமில்லை...
அவளும் எதிர்பார்த்ததுமில்லை.

23 ஜூன், 2010

பூக்கள்

பூமித் தாவரங்களின்
பிரசவ காலப்
புன்னகை !

கிளைகளில் குவிந்த
வான வில்லின்
வசீகரம் !

மகரந்தக் கூடத்தில்
தேன் தயாரிக்கும்
மலர்த் தொழிற்சாலை !

ஈக்களை எதிர்பார்த்துப்
பரிமாறப்பட்ட
பந்தி!

அழகுக்கெல்லாம் ஆயுள்
அற்பம் என்பதை
உணர்த்தும் உன்னதம் !

விஷச்செடியானாலும்
விளைகிறது இங்கே
சுவைத்தேன் !

வாழ்வுக்கும் சாவுக்கும்
வேறுபாடில்லாத
விற்பனை!

(எனது "பூட்டுகள்" நூலிலிருந்து )

சிங்கப்பூரிலும் சாதி.




சிங்கப்பூரிலும் சாதி!


விரதமிருந்து வென்றுவருகிறேன் -என்
விடலைப்பருவ சபலநாட்களை இந்த
வெள்ளித்தீவிலும்.....

ஆடையைச் சுமையாய் என்னும்
அழகிகளைச் சாலையில்
அடிக்கடி கடக்கும்போதும்...

பெரிய திரையிலும்
சின்னத்திரையிலும்
கட்டிலறையில் கணினித்திரையிலும்
ஆபாசங்கள் திரை விரிக்கும்போதும்...

இன்னும் எத்தனையோ
வண்ண வண்ண வசீகரங்கள்
சபலநரம்புகளுக்கு
சாப்பாடு போடக்
கூப்பிடும்போதும்
விரதமிருந்து
வென்று காட்டவும்
காத்திருக்கும் காதலிக்காக
கற்பைப் பாதுகாத்துவைக்கவும்
காரணமாயிருக்கிற
அந்த மந்திரம்,
“மேலைக்கலாசாரத்தில்
விழுந்துவிடாமல்
சிங்கப்பூரிலும் சாதி” என்று தந்தை
சொல்லியனுப்பிய சேதிதான்.

21 ஜூன், 2010

வெண்பாக்கள்

குறள் வெண்பா

நெடிய மனக்கவலை,நீடித்த சோகம்
வடியக் கவிதை வடி.


சிந்தியல் வெண்பா

தெள்ளுதமிழ்ச் சொத்தெமக்கு; சிந்தனைக்கு நல்லறிவை
அள்ளியள்ளி ஊட்டும் அமுதமழை- வெள்ளமது
வள்ளுவமோர் முப்பால் மது.

நேரிசை வெண்பா

மாமியார் வீடின்றி வாழ்வை அனுபவிக்க
சாமியார் வாழ்வே சரியென்று-தாமிருந்த
மோனத் தவநிலையில் மோகத்தீ மூளவிட்டோர்
காணவேண்டும் வெஞ்சிறையில் காப்பு.

இன்னிசை வெண்பா

ஈழத்தின் ஏக்கம் இதயமெலாம் சூழ்ந்திருக்க
வாழத் தலைப்பட்ட வள்ளியம்மைத் தாய்போன்றோர்
நீர்வழியும் கண்களொடு நீர்வழியும் வான்வழியும்
பார்முழுதும் வேர்விட்டார் பார்.

19 ஜூன், 2010

செடிகள்


மரங்களின் வீர்யத்தை
நிச்சயிக்கும்
இயற்கை எக்ஸ்ரே !

பூமித்தாயின் முகத்தில்
முளைத்த பச்சைப் பருக்கள் !

மண்கோழி அடைகாத்த
விதை முட்டையை
உடைத்துக்
கிளர்ந்தெழுந்த
தாவரக் குஞ்சு !

மரங்கள்
மரபுக் கவிதையென்றால்
செடிக்கவிதை ஓர் ஹைக்கு !

பூமித்தாயை விட்டு
உயரே வளர
ஆசைப்படாத
அம்மா பிள்ளைகள் !

(எனது "பூட்டுகள்" கவிதை நூலிலிருந்து )

12 மார்ச், 2010

பக்தி....?

ஆண்மை அடக்கிடவே ஆண்மையற்ற சாமியார்
ஆன்மா அடக்குவதாய் "அள்ளிவிட்ட"_ வீண்பொய்யை
நம்பியே ஏமாந்தோர் நம்பும் பழமொழி ,
"வெம்பிப் பழுத்தபக்தி வீண்".

21 பிப்ரவரி, 2010

கவிமாலை

அன்பழகன், ஆ,இளங்கோ, இக்பால், முல்லை
ஆசிரியர் சித்தார்த்தன், சபா.ரா போன்ற
என்பெங்கும் தமிழுணர்வு கொண்டோர் கூடி
இயக்குகிற கவிமாலை, கவிதை ஆலை.

29 அக்டோபர், 2009

நூல்

அறிவை
அடைகாக்கும்
காகிதக் கோழி !

புரட்டப் புரட்டப்
புதையல் திறக்கும்
சுரபி !

ஆறாம் அறிவுக்குத்
தீனி சுரக்கும்
அஃறினை !

நூல்
ஞான மூலதனத்தால்
நடத்தப்படுகிற
"வரிகள் " நிறைந்த
வணிகம்
இந்த வணிகத்தில்
இலக்கிய தரமிருந்தால்
நட்டக்கணக்கு மட்டுமே
நடப்பு நிதி நிலவரம் !

(எனது நிழல்மடி நூலிலிருந்து)