அறிவை
அடைகாக்கும்
காகிதக் கோழி !
புரட்டப் புரட்டப்
புதையல் திறக்கும்
சுரபி !
ஆறாம் அறிவுக்குத்
தீனி சுரக்கும்
அஃறினை !
நூல்
ஞான மூலதனத்தால்
நடத்தப்படுகிற
"வரிகள் " நிறைந்த
வணிகம்
இந்த வணிகத்தில்
இலக்கிய தரமிருந்தால்
நட்டக்கணக்கு மட்டுமே
நடப்பு நிதி நிலவரம் !
(எனது நிழல்மடி நூலிலிருந்து)
29 அக்டோபர், 2009
01 செப்டம்பர், 2009
குழந்தை...
பொம்மையைக் கண்டாலே
பொக்கைவாய் பூப்பூக்கும்
உயிர்ச்செடி .
இதழிடுக்கின் ஈறுகளால்
மனம் மயக்கும்
மானுட மலர் .
மறக்கப்போகும் சிரிப்பையெல்லாம்
அரக்கப் பறக்கச் சுரக்கும்
அரும்பு .
தங்கக் கொலுசொலிக்கும்
தகரக் கிலுகிலுப்பைக்கும்
வேறுபாடரியாத வெண்மனம் .
ரோசா செய்யும் போது
குழந்தை செய்த கடவுளின்
ஞாபக நகல் .
(எனது "நிழல் மடி " நூலிலிருந்து)
பொக்கைவாய் பூப்பூக்கும்
உயிர்ச்செடி .
இதழிடுக்கின் ஈறுகளால்
மனம் மயக்கும்
மானுட மலர் .
மறக்கப்போகும் சிரிப்பையெல்லாம்
அரக்கப் பறக்கச் சுரக்கும்
அரும்பு .
தங்கக் கொலுசொலிக்கும்
தகரக் கிலுகிலுப்பைக்கும்
வேறுபாடரியாத வெண்மனம் .
ரோசா செய்யும் போது
குழந்தை செய்த கடவுளின்
ஞாபக நகல் .
(எனது "நிழல் மடி " நூலிலிருந்து)
லேபிள்கள்:
கவிதை,
குழந்தை,
ந.வீ.விசயபாரதி,
நிழல் மடி
31 ஆகஸ்ட், 2009
கடல்
கருமியின் கைப்பணமாய்ப்
பருக பயன்படாத
திரவ விரயம் .
*
அலைபுகை வெளியிடும்
அசைவ உணவு
தொழிற்சாலை .
*
சந்ததியைப் பறிகொடுத்த
கடல் மீன்களின்
கண்ணீர் தேசம்.
*
"முதலை " இழந்தாலும்
முழ்கிபோகாத
இயற்கை வங்கி .
*
(எனது நிழல் மடி புத்தகத்திலிருந்து )
லேபிள்கள்:
கடல்,
கவிதை,
ந.வீ.விசயபாரதி,
நிழல் மடி
27 ஆகஸ்ட், 2009
தண்ணீர்
கலகம் பிறந்துசுடு காடாய் - உலகழிய
நீரே கரணியமாய் நிற்குமெனில் ஈரமன
நீரே"தீ" யாகும் நிகழ்வு.
லேபிள்கள்:
கவிதை,
தண்ணீர்,
ந.வீ.விசயபாரதி,
வெண்பா
24 ஆகஸ்ட், 2009
எலிச் சொடுக்கலில் ...
மூடிய வலக்கையின்
எலிச் சொடுக்கலில்
உயிர்க்கிறாய் வண்ணமயமாய் !
@
எத்தனை செலவு செய்தாலும்
எட்டமுடியாத தூரங்களையும்
பார்வைக்குப்
பந்தி வைக்கிறாய் .
@
தொலைதேச மைதானத்தில்
உதைப்படும் பந்துகளையும்
கைதொடும் தூரத்தில்
காட்டி மிரட்டுகிறாய் !
@
பிசிராந்தையார் காலநட்பை
முகம் பார்த்து
முன் மொழியவும்
இன கவர்ச்சி காட்டி
வழிமொழியவும் கூட
வலைவிரிக்கிறாய்.
@
திரைத்துறை ஜாம்பவான்கள்
எத்தனை போராடினாலும்
ஓசையில்லாமல்
புதிய படங்களைக் கூட
திரை இறக்கம்
செய்து தருகிறாய் !
@
அறைக்குள் திரைவிரிக்கும்
வண்ணக் கணினியே
உன்னை எண்ணி
பரவசத்தை விடவும்
பரிதாபமே மேலிடுகிறது ...
அடுத்து வருகிற எந்த
அறிவியல் கண்டுபிடிப்பு உன்னை
எடுத்தெரியப் போகிறதோ என்ற
இரக்கத்தால் !
லேபிள்கள்:
எலிச் சொடுக்கலில்,
கணினி,
கவிதை,
ந.வீ.விசயபாரதி
22 ஆகஸ்ட், 2009
பொரு"ளாதாரம்"
கொந்தளித்துவிட்டார் -பாரத
உள்துறை அமைச்சர் !
*
அமெரிக்க அரசிடம்
புகார் செய்யப் போவதாகவும்
அறிவித்திருக்கிறார் ...
*
இத்தனை பெரிய பதவிலிருப்பவரை
இரத்தம் கொதிக்கவைத்த அந்த
ஆத்திர சம்பவம் எது ?
*
*
படிக்கவும் பிழைக்கவும் போன
பலப்பல தேசங்களில்
உதைபடுகிற இந்தியர்கள் பற்றிய
உணர்ச்சிக் கொந்தளிப்பா ?
*
எரிவாயுவும் எண்ணெய்விலையும்
ஏறி ஏறியே இந்திய மக்களை
நசுக்குகிறதே என்ற வேதனைக்கு
உலகளாவிய தீர்வு காணும்
உந்துதலா ?
*
*
முள்வேலிக் கமிபிக்கிடையே
முடங்கிக் கிடக்கிற
மூன்று லச்சம் தமிழர்களின்
எதிர்காலம் பற்றிய
எழுந்த ஆத்திரமா ?
*
பொறுங்கள் இந்திய நாட்டுப்
பொதுமக்களே ...பொறுங்கள் ...
*
உலகின் மிகப் பெரிய
ஜனநாயக நாட்டின்
உள்துறை அமைச்சரை
உணர்ச்சி வசப்பட வைத்த
சம்பவம் எது தெரியுமா ?
*
அமெரிக்க விமான நிலைய
அதிகாரிகள்
சோதனை என்ற பெயரில்
இரண்டு மணி நேரம்
காத்திருக்க வைத்துவிட்டார்களாம்
நடிகர் ஷாருக்கானை ...
*
*
அமெரிக்க அரசிடம்
புகார் செய்ய
அமைச்சருக்குதான் எத்தனை
அவசியமான பிரச்சனை என்று
எண்ணி எண்ணியே
இறுமாந்து போகின்றன
இந்திய இதயங்கள் ...
*
*
பாரத மாதா கீ ஜே!
பாலிவுட் பிதாவுக்கு ... ம்ம்..ஜே !!
லேபிள்கள்:
கவிதை,
ந.வீ.விசயபாரதி,
பொருளாதாரம்
21 ஆகஸ்ட், 2009
புலமைப் புதிர்
முன்னிரண்டின் கையில் முடிவிரண்டும் நாசந்தான்
பின்னிரண்டும் பாவாகும்! பேசாத - அன்னமே
ஊரறிந்த தில்லை; உயர்ந்தோரே கூடுமது
நேரத்தைச் சுட்டும் நிகழ்வு !
லேபிள்கள்:
கவிதை,
ந.வீ.விசயபாரதி,
புலமைப் புதிர்,
வெண்பா
19 ஆகஸ்ட், 2009
நூல் வெளியீட்டு விழா!
அழைப்பிதழ் ...
வரவேற்புரை ...
வாழ்த்துரை ...
அணிந்துரை ...
ஆய்வுரை ...
ஏற்புரை என்று
எந்தவிதமான
சம்பிரதாயச்
சடங்குகளுமின்றி
நடந்து முடிந்தது
நூல் வெளியீட்டு விழா ...
*
செழுமையாக
விம்மி வெடித்தது
செடியில் பருத்தி .
லேபிள்கள்:
கவிதை,
ந.வீ.விசயபாரதி,
நூல் வெளியீட்டு விழா,
பருத்தி
13 ஆகஸ்ட், 2009
யாப்பியல்
அப்பாவை அப்பாவை அப்பாவைப் பாவகையுள்
எப்பா வகையென்றே ஈர்வதென்றாள் _ அப்பாவும்
யாப்பியல் கற்றிடுநீ; யாண்டும் கவியியலில்
மூப்பாயென் றாரே முனைந்து.
லேபிள்கள்:
கவிதை,
ந.வீ. விசயபாரதி,
யாப்பியல்,
வெண்பா
10 ஆகஸ்ட், 2009
விதி
காலால் மிதித்தபடி
சிவப்பு விளக்கு
விழுந்தபின் ஓடினான்
ஓடும்போதே விழுந்தான்
ஆயிரம் மைல்களுக்கும் அப்பால்
அறுந்து விழுந்தது -எனக்கு
அறிமுகம் இல்லாத
ஒரு தங்கையின் தாலி !
*
மீறியது சாலை விதி !
மாறியது தலை விதி !!
லேபிள்கள்:
கவிதை,
ந.வீ.விசயபாரதி,
விதி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)