29 அக்டோபர், 2009

நூல்

அறிவை
அடைகாக்கும்
காகிதக் கோழி !

புரட்டப் புரட்டப்
புதையல் திறக்கும்
சுரபி !

ஆறாம் அறிவுக்குத்
தீனி சுரக்கும்
அஃறினை !

நூல்
ஞான மூலதனத்தால்
நடத்தப்படுகிற
"வரிகள் " நிறைந்த
வணிகம்
இந்த வணிகத்தில்
இலக்கிய தரமிருந்தால்
நட்டக்கணக்கு மட்டுமே
நடப்பு நிதி நிலவரம் !

(எனது நிழல்மடி நூலிலிருந்து)


01 செப்டம்பர், 2009

குழந்தை...

பொம்மையைக் கண்டாலே
பொக்கைவாய் பூப்பூக்கும்
உயிர்ச்செடி .

இதழிடுக்கின் ஈறுகளால்
மனம் மயக்கும்
மானுட மலர் .

மறக்கப்போகும் சிரிப்பையெல்லாம்
அரக்கப் பறக்கச் சுரக்கும்
அரும்பு .

தங்கக் கொலுசொலிக்கும்
தகரக் கிலுகிலுப்பைக்கும்
வேறுபாடரியாத வெண்மனம் .

ரோசா செய்யும் போது
குழந்தை செய்த கடவுளின்
ஞாபக நகல் .

(எனது "நிழல் மடி " நூலிலிருந்து)

31 ஆகஸ்ட், 2009

கடல்


கருமியின் கைப்பணமாய்ப்
பருக பயன்படாத
திரவ விரயம் .
*
அலைபுகை வெளியிடும்
அசைவ உணவு
தொழிற்சாலை .
*
சந்ததியைப் பறிகொடுத்த
கடல் மீன்களின்
கண்ணீர் தேசம்.
*
"முதலை " இழந்தாலும்
முழ்கிபோகாத
இயற்கை வங்கி .
*
(எனது நிழல் மடி புத்தகத்திலிருந்து )

27 ஆகஸ்ட், 2009

தண்ணீர்

உலகின் திரவ உயிர்மூச்சு ! நாளை
கலகம் பிறந்துசுடு காடாய் - உலகழிய
நீரே கரணியமாய் நிற்குமெனில் ஈரமன
நீரே"தீ" யாகும் நிகழ்வு.

24 ஆகஸ்ட், 2009

எலிச் சொடுக்கலில் ...

மூடிய வலக்கையின்

எலிச் சொடுக்கலில்

உயிர்க்கிறாய் வண்ணமயமாய் !

@

எத்தனை செலவு செய்தாலும்

எட்டமுடியாத தூரங்களையும்

பார்வைக்குப்

பந்தி வைக்கிறாய் .

@

தொலைதேச மைதானத்தில்

உதைப்படும் பந்துகளையும்

கைதொடும் தூரத்தில்

காட்டி மிரட்டுகிறாய் !

@

பிசிராந்தையார் காலநட்பை

முகம் பார்த்து

முன் மொழியவும்

இன கவர்ச்சி காட்டி

வழிமொழியவும் கூட

வலைவிரிக்கிறாய்.

@

திரைத்துறை ஜாம்பவான்கள்

எத்தனை போராடினாலும்

ஓசையில்லாமல்

புதிய படங்களைக் கூட

திரை இறக்கம்

செய்து தருகிறாய் !

@

அறைக்குள் திரைவிரிக்கும்

வண்ணக் கணினியே

உன்னை எண்ணி

பரவசத்தை விடவும்

பரிதாபமே மேலிடுகிறது ...

அடுத்து வருகிற எந்த

அறிவியல் கண்டுபிடிப்பு உன்னை

எடுத்தெரியப் போகிறதோ என்ற

இரக்கத்தால் !

22 ஆகஸ்ட், 2009

பொரு"ளாதாரம்"

உணர்ச்சிப் பெருக்கால்
கொந்தளித்துவிட்டார் -பாரத
உள்துறை அமைச்சர் !
*
அமெரிக்க அரசிடம்
புகார் செய்யப் போவதாகவும்
அறிவித்திருக்கிறார் ...
*
இத்தனை பெரிய பதவிலிருப்பவரை
இரத்தம் கொதிக்கவைத்த அந்த
ஆத்திர சம்பவம் எது ?
*
படிக்கவும் பிழைக்கவும் போன
பலப்பல தேசங்களில்
உதைபடுகிற இந்தியர்கள் பற்றிய
உணர்ச்சிக் கொந்தளிப்பா ?
*
எரிவாயுவும் எண்ணெய்விலையும்
ஏறி ஏறியே இந்திய மக்களை
நசுக்குகிறதே என்ற வேதனைக்கு
உலகளாவிய தீர்வு காணும்
உந்துதலா ?
*
முள்வேலிக் கமிபிக்கிடையே
முடங்கிக் கிடக்கிற
மூன்று லச்சம் தமிழர்களின்
எதிர்காலம் பற்றிய
எழுந்த ஆத்திரமா ?
*
பொறுங்கள் இந்திய நாட்டுப்
பொதுமக்களே ...பொறுங்கள் ...
*
உலகின் மிகப் பெரிய
ஜனநாயக நாட்டின்
உள்துறை அமைச்சரை
உணர்ச்சி வசப்பட வைத்த
சம்பவம் எது தெரியுமா ?
*
அமெரிக்க விமான நிலைய
அதிகாரிகள்
சோதனை என்ற பெயரில்
இரண்டு மணி நேரம்
காத்திருக்க வைத்துவிட்டார்களாம்
நடிகர் ஷாருக்கானை ...
*
அமெரிக்க அரசிடம்
புகார் செய்ய
அமைச்சருக்குதான் எத்தனை
அவசியமான பிரச்சனை என்று
எண்ணி எண்ணியே
இறுமாந்து போகின்றன
இந்திய இதயங்கள் ...
*
பாரத மாதா கீ ஜே!
பாலிவுட் பிதாவுக்கு ... ம்ம்..ஜே !!

21 ஆகஸ்ட், 2009

புலமைப் புதிர்


முன்னிரண்டின் கையில் முடிவிரண்டும் நாசந்தான்
பின்னிரண்டும் பாவாகும்! பேசாத - அன்னமே
ஊரறிந்த தில்லை; உயர்ந்தோரே கூடுமது
நேரத்தைச் சுட்டும் நிகழ்வு !

19 ஆகஸ்ட், 2009

நூல் வெளியீட்டு விழா!

ஆர்ப்பாட்டமான
அழைப்பிதழ் ...
வரவேற்புரை ...
வாழ்த்துரை ...
அணிந்துரை ...
ஆய்வுரை ...
ஏற்புரை என்று
எந்தவிதமான
சம்பிரதாயச்
சடங்குகளுமின்றி
நடந்து முடிந்தது
நூல் வெளியீட்டு விழா ...
*
செழுமையாக
விம்மி வெடித்தது
செடியில் பருத்தி .

13 ஆகஸ்ட், 2009

யாப்பியல்


அப்பாவை அப்பாவை அப்பாவைப் பாவகையுள்
எப்பா வகையென்றே ஈர்வதென்றாள் _ அப்பாவும்
யாப்பியல் கற்றிடுநீ; யாண்டும் கவியியலில்
மூப்பாயென் றாரே முனைந்து.

பண்பாடு


உலகமயமாதலின்
உச்சத்தில்
சுருங்கிப் போயின
உலகமும் உடைகளும்
*
உடைகளின் கண்ணியம்
உடைக்கப்பட்டதால்
எதிர்காலத்தில் வருமோ
20 கிராம் தங்கமும்
25 கிராம் மேலாடையும்
எடுக்கும் சூழல் ?

10 ஆகஸ்ட், 2009

விதி

சாலை விதிகளை
காலால் மிதித்தபடி
சிவப்பு விளக்கு
விழுந்தபின் ஓடினான்
ஓடும்போதே விழுந்தான்
ஆயிரம் மைல்களுக்கும் அப்பால்
அறுந்து விழுந்தது -எனக்கு
அறிமுகம் இல்லாத
ஒரு தங்கையின் தாலி !
*
மீறியது சாலை விதி !
மாறியது தலை விதி !!